திருச்சியில் சமயபுரம் டோல்கேட் அல்லது உத்தமர் கோயில் நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது உத்தமர் கோயில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்.

பெயர்ச்சிறப்பு
மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள இத்திருத்தலம் பல சிறப்புப் பெயர்களையும் கொண்டுள்ளது.
கடம்ப மரங்கள் அதிகமிருந்தமையால், கடம்பனூர் என வழங்கப்பெற்று பிறகு அது கரம்பனூர் எனவும், திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர். இதுவே வடமொழியில் நீப ஷேத்திரம் என்றானது. புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது. சிவபெருமான் திருவோடேந்தி பிட்சை கேட்ட திருக்கோலத்தில் எழுந்தருளியமையால், பிட்சாடனர் கோயில் எனலாயிற்று. மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி ஷேத்திரம் எனவும் இது வழங்கப்படுகிறது
வரலாற்றுச் சிறப்புகள்
பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன. இவர்களுள் சோழ மன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும் அடங்குவர். முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே அற்று இருந்ததாகவும், அதனால் எந்நேரமும் இறைவனைத் தொழுதிட இயன்றிருந்தது எனவும் பெரியவாசன் பிள்ளையின் குறிப்பொன்று கூறுகிறது.
சந்நதிகள்
பெருமாள் சந்நதி; தாயார் சந்நதி; சிவன் சந்நதி; பார்வதி சந்நதி; பிரம்மா சந்நதி; சரஸ்வதி சந்நதி
தல வரலாறு
இத்தலத்திற்குப் பல வரலாறுகள் உள்ளன. ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு. மகாலட்சுமி கபாலத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரும் பெற்றாள்.
சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் ‘பிச்சாண்டார் கோயில்’ என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் ‘கதம்பனூர்’ என்றும் ‘கரம்பனூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை ‘உத்தமர் கோயில்’ என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, ‘நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்’ என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது. இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம்.
ஜனகர் இங்குள்ள கதம்ப தீர்த்தக்கரையில் ஒரு யாகம் செய்தார். யாகத்தில் அவியுணவுகளை நாய் ஒன்று புசித்து மாசுபடுத்திவிட்டதால், அத்தோஷம் நீங்க கதம்ப மரத்தை பூஜிக்குமாறு ஜனகனிடம் முனிவர்கள் கூற, மீண்டும் யாகத்தைத் துவக்கி கதம்ப மரத்தை பக்தி சிரத்தையோடு வழிபட அரவணையில் அறிதுயிலமர்ந்த கோலத்தில் தனது நாபியில் பிரம்மாவுடனும், அருகில் பிட்சாண்ட மூர்த்தியான சிவனுடனும் திருமால் ஜனகனுக்கு காட்சி கொடுத்தார். மும்மூர்த்திகளையும் ஒருங்கே கண்ட ஜனகர்தான், இங்கு மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் எடுத்தார் என்று வரலாறும் உண்டு.
சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுவதால் இத்தலம் சப்தகுருத்தலம் என்ற சிறப்பைப் பெறுகிறது. குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது.
ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும்.
திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோயில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார். கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே “ஆழ்வார்பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
திருவிழா
சித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா. கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.