பி. லீலா என அழைக்கப்படும் பொறயாத்து லீலா (19 மே 1934 – 31 அக்டோபர் 2005) பிரபலமான தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு இறப்பிற்குப் பின்னர் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
பி. லீலா கேரள மாநிலம், பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது கடைசி மகளாக பிறந்தார். சாரதா, பானுமதி என்ற இரு அக்காள். அப்பா மேனன் ராமவர்மா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். லீலாவுக்கு மணிபாகவதர் முதல் குருவாக இருந்து முறையான இசைப் பயிற்சி அளித்தார். பின்னர் பத்தமடை கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் என பல மேதைகளிடம் பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக் கொண்டார்.
12 வயதில் ஆந்திர மகளிர் சபையில் லீலா கச்சேரி செய்து துர்கா பாய் தேஷ்முக் அவர்களிடம் பாராட்டையும், பரிசையும் பெற்றார். பின்னர் தென்னிந்தியா முழுக்க பல கச்சேரிகள் செய்தார். 1948ல் திரைத்துறையில் நுழைந்தார். எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பாடினார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இளையராஜாவின் இசையில் கற்பூர முல்லை என்ற படத்திற்காக “ஸ்ரீசிவ சுத பத கமல” என்ற பாடலைப் பாடினார்.
இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.
விருதுகள்
ஞானகோகிலம், ஞானமணி, கலாரத்னம், கானவர்சினி என பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டார் பி.லீலா. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். கேரள, தெலுங்கு திரை உலகமும் பல விருதுகளை அளித்து இவரை கௌரவித்தன. இவர் இறந்த பின்னர் மத்திய அரசு 2006ல் பத்ம பூசன் விருதை அளித்தது.
மறைவு
சென்னை டிபென்ஸ் காலனியில் தனது உறவினர்கள் வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்த பி.லீலா தனது 76ஆவது வயதில் 2005ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
பாடிய பாடல்கள்
- எங்குமே ஆனந்தம் (பலே ராமன், 1957)
- மாப்பிள்ளை டோய் (மனம்போல் மாங்கல்யம், 1953)
- தேன்சுவை மேவும் (டாக்டர் சாவித்திரி, 1955)
- காத்திருப்பான் கமலக்கண்ணன் (உத்தமபுத்திரன், 1958)
- சில சில ஆண்டுகள் (எங்கள் செல்வி, 1960)
- ராஜாமகள் ரோஜாமலர், வெண்ணிலவே (வஞ்சிக்கோட்டை வாலிபன்)
- கன்னங்கறுத்த கிளி (சிவகங்கை சீமை)
- எண்ணம் எல்லாம் (சக்கரவர்த்தி திருமகள், 1957)
- மாயமே நானறியேன், எனையாளும் மேரிமாதா (மிஸ்ஸியம்மா]], 1955)
- கண்ணே கமலப்பூ (பெரிய கோயில், 1958)
- அமிர்தயோகம் (அன்பு எங்கே, 1958)
- ஆடி பிழைத்தாலும் (படிக்காத மேதை, 1960)
- தென்றல் உறங்கி (சங்கிலித்தேவன், 1960)
- சிறுவிழி குறுநகை (இல்லற ஜோதி, 1954)
- கானகமே எங்கள் (யானை வளர்த்த வானம்பாடி, 1959)
- மனமோகனா (புதுமைப்பித்தன், 1957)
- ஏட்டில் படித்ததோடு (குமார ராஜா, 1961)