அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:
தடுத்தாலீஸ்வரர், தீண்டாத்திருமேனீஸ்வரர்
அம்மன்/தாயார்:
காமாட்சி
தல விருட்சம்:
வில்வ மரம்
ஊர்:
தண்டலம்
மாவட்டம்:
திருவள்ளூர்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி
தல சிறப்பு:
இங்குள்ள மூலவர் காமாட்சி அம்மனின் மூலவிக்ரகத்தில் தாலி இயற்கையாகவே அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் தண்டலம், செவ்வாய்ப்பேட்டை, புட்லூர் அருகில், திருவள்ளூர் மாவட்டம்.
பொது தகவல்:
இங்கு மூலவராகவும், கோஷ்ட மூர்த்தியாகவும் இருகோணத்தில் அம்பாள் உறைகிறாள். மேலும் சித்தர் ஒருவர் சமாதியான இடத்திலும் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுவற்றின் மேல் கூரையில் ஜோடிமீன் ஆமை பாம்புகள் என தோஷம் நீக்கும் மேல்தளமாக அமைந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணத் தடை உள்ளவர்கள் 48 நாட்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு வைத்து இங்குள்ள காமாட்சி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்று சொல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
தீண்டாத்திருமேனீஸ்வரர் :
இவ்வாலயத்தில் சித்தர் ஒருவர் சமாதியானதாக ஒரு செவி வழிச் செய்தி நிலவுகிறது. அதன் மேல் இந்த லிங்கம் அமைந்துள்ளதால் இவ்வாலய இறைவனை யாரும் தொடுவதில்லை. காலப்போக்கில் தீண்டாத் திருமேனீஸ்வரர் என்ற நாமத்துடன் அழைக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது.
காமாட்சியம்மன் :
இயற்கையாகவே இவ்வாலய அம்மனுக்குத் தாலி பொறிக்கப்பட்டுள்ளதால் கல்யாணத் தடை நீக்கும் தலமாக உள்ளது. கல்யாணத் தடை உள்ளவர்கள் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு வைத்து ஒரு மண்டலம் (நாற்பத்தெட்டு நாட்கள்) பூஜை செய்தால் ஒரு ஆண்டுக்குள் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கான மஞ்சள் கயிறும், மஞ்சள் கிழங்கும் ஆலயத்திலேயே கொடுக்கப்படுகின்றன. திருமணம் முடிந்த ஒரு ஆண்டில் அதே அம்மனுக்கு மாங்கல்யம் சாற்றுவது விசேஷம். வள்ளியை மணம் புரிந்ததால் கல்யாண சுப்பிரமண்யராக இக்கோயிலில் முருகன் காட்சி தருகிறார். இவ்வாலய இறைவனுக்கு நெய் அபிஷேகமும், விபூதி அபிஷேகமுமே விஷேசமானது. பவுர்ணமியன்று நோய் நிவாரண பூஜையாக விபூதி அபிஷேகம் செய்து அதே விபூதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.
தல வரலாறு:
இவ்வாலயம் வள்ளி வழிபட்ட திருத்தலம். முருகப் பெருமானுக்காக வள்ளி காத்திருந்து தவம் செய்தும் முருகன் வராததால் உயிர்த்தியாகம் செய்வதற்காக அக்னியை மூட்டி அதில் உயிர்த்தியாகம் செய்ய முயற்சித்த தருணத்தில் சிவபிரான் தடுத்து தன் மகனை வள்ளியின் மணாளனாக ஆக்கியதால் இவ்வாலய இறைவனுக்கு தடுத்தாலீஸ்வரர் என்ற திருநாமம் உண்டாயிற்று. இதற்கு அடையாளமாக இவ்வாலயம் வழியாக திருத்தணிக்குப் பாதையுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்குள்ள மூலவர் காமாட்சி அம்மனின் மூலவிக்ரகத்தில் தாலி இயற்கையாகவே அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பு.